தமிழின் இரண்டாம் தலைநகரம்
பேராசிரியர் கி.நாச்சிமுத்து
திருவனந்தபுரத்தை இரண்டாவது தமிழ்த் தலைநகரம் என்று சொல்லலாம். அது தமிழகத்துடன் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள இடம். அங்கு 45 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள் தான் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. ஒருவகையில் சொல்லப்போனால் அது தமிழர்களுக்குச் சொந்தமான இடம். சுந்தரம்பிள்ளை, அவருக்கு முன்னமே வரகவி ராமன் பிள்ளை (திருக்குறுங்குடி நம்பி பேரில் சதகம்) இருந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை மகாராஜாவின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கென்றே தோற்று விக்கப்பட்ட சபை அது. வையாபுரிப்பிள்ளை, இசைச்செல்வர் லட்சுமண பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் அங்கு இருந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஒருமுறை இந்த சைவப்பிரகாச சபைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா என்று வையாபுரிப்பிள்ளை கேட்கிறார். ஆனால் மற்றவர்களோ, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்றும் இவரை அழைத்துக் கூட்டம் போட்டால் அரசின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் என்று வையாபுரிப்பிள்ளை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார். பாரதி தன்னுடைய ஊழிக்கூத்தை அங்கு பாடிக் காட்டினார் . இங்கிருந்து தமிழன் என்றொரு இதழ் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல தமிழ் நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோருக்குக் குருவாக தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்றொரு தமிழர் இருந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய ஞானி. தீர்க்கதரிசி. மறைமலை அடிகள், சுவாமிநாத தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ரட்சணிய யாத்ரீகம் எழுதிய ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. - இவரைக் கிறிஸ்துவர்களின் கம்பர் என்று சொல்வார்கள். அவரும் இருந்திருக்கிறார். ஆதிகாலத்திலிருந்தே திருவனந்தபுரத்தில் அதிகமாகத் தமிழ் நாடகங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். பார்ஸி நாடகங்கள் எல்லாம் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகு அதைப் பார்த்துத்தான் அங்கே மலையாள நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார்களாம். நீலக்குயில் என்னும் மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்த மெரிலாண்ட் பி.சுப்பிரமணியன் ஒரு தமிழர்தான். அவருடைய மகன் திரு.சந்திரன்தான் தற்போது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் புரவலர்களில் ஒருவர். நீலகண்ட சிவன் அங்கு இருந்திருக்கிறார். பாபநாசம் சிவனின் இளம் வயது திருவனந்தபுரத்தில்தான் கழிந்தது. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து நிறைய சமஸ்கிருத பண்டிதர்கள் இங்கு வந்து அரசரின் ஆதரவைப் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பாஸன் நாடகங்கள் போன்றவற்றையெல்லாம் பதிப்பித்த கணபதி சாஸ்திரி, சாம்பசிவ சாஸ்திரி போன்றோரெல்லாம் இங்குதான் இருந்திருக்கிறார்கள். இப்படி தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய தமிழர்கள் இங்கே தொண்டு புரிந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மாமனார் வீடு திருவனந்தபுரம்தான். நகுலன் இருக்கிறார். ஆ.மாதவன், நீலபத்மநாபன், ஹெப்ஸிபா ஜேசுதாசன் இருக்கிறார்கள். அமரர் சண்முகசுப்பையா, அமரர் ஜேசுதாசன் ஆகியோர் இங்குதான் இருந்தார்கள். இப்படி நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியின் தமிழ்த்துறை 150 ஆண்டுகள் பழமையானது. வள்ளல் அழகப்ப செட்டியாரின் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் உருவான கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறுபது ஆண்டுகள் பழமையானது. இந்தத் துறையில் மு.ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம் ச.வே.சுப்பிரமணியன், மா.இளையபெருமாள் போன்ற மேன்மையான தமிழறிஞர்கள் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இரண்டு துணைவேந்தர்களும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும் இங்கிருந்து சென்றவர்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.
மேலும் விபரங்களுக்கு.....
http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&page=3
No comments:
Post a Comment